ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் செவ்வாய்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிவகாசியை சேர்ந்த மாரீஸ்வரன் (35) இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பாக நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி தலை மலையான் ஓடையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட அவரை நத்தம்பட்டி போலீசார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளாக செவ்வாய்கிழமை காலை தேடும் பணியில் ஈடுபட்டபோது இளைஞர் மாரீஸ்வரன் உடல் இலந்தைகுளம் கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.