மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை முதல் போலீஸாரின் தடையை மீறி பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்க திரண்டனர்.
மூதாதையர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் அளித்தால்; ஆண்டு முழுவதும் தர்ப்பணம் அளித்ததற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் வரும்; மகாளய அமாவாசை மூதாதையர் பூமிக்கு வரும் நாளாக இந்துக்களால் நம்பப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மகாளய அமாவாசை தினத்தன்று பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை ஆகிய இடங்களில் மூதாதையர்களுக்கு திதி செலுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு கூடும்பட்சத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டிருந்தார்.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டம், கங்கை முதலான புண்ணிய நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக்கொண்ட புனித தலமாக போற்றப்படுகிறது.
எனவே, ஆண்டுதோறும் காவிரி துலாக்கட்டத்தில் மகாளய அமாவாசை தினத்தில் காவிரி துலாக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். இதையொட்டி, காவிரி துலாக்கட்டத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை போலீஸார் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர்.
ஆனால், தடையை மீறி பொதுமக்கள் புதன்கிழமை அதிகாலைமுதல் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸார் தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தி, புதிதாக வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்க திரண்ட பொதுமக்களை போலீஸார் கலைத்து திருப்பி அனுப்பினர்.