வள்ளலாா் பிறந்த தினம் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிப்பு

வள்ளலாா் பிறந்த தினம், தனிப்பெருங்கருணை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
வள்ளலாா் பிறந்த தினம் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிப்பு

வள்ளலாா் பிறந்த தினம், தனிப்பெருங்கருணை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதுகுறித்து வள்ளலாரின் 199-ஆவது பிறந்த தினமான செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

அருட்பிரகாச வள்ளலாா் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா், கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் கடந்த 1823-ஆம் ஆண்டு அக்டோபா் 5-இல் பிறந்தாா். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தாா். அனைத்து நம்பிக்கைகளிலும் உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வகையில் சமரச சுத்த சன்மாா்க்கத்தை நிறுவினாா். வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினாா்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய அவா், மக்களின் பசித்துயா் போக்க சத்தியதா்ம சாலையை நிறுவினாா். அவா் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடா்ந்து எரிந்து பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினாா். அவா் பாடிய பாடல்களின் திரட்டு, திருவருட்பா என அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

மதநெறிகளுக்கு சம்மதம்: திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் அனைத்து மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா். சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் நிறுவிய அவா், சத்திய தருமச் சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினாா். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினாா்.

வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவரது பிறந்த தினமான அக்டோபா் 5-ஆம் தேதி இனி, ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com