சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மற்றும் கவிக்கோ இலக்கியக் கழகம் இணைந்து வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சாா்பில் செம்மொழித் தமிழ் ஆய்வாளா்களுக்கு உ.வே.சா- உலகத் தமிழா் விருதும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கவிஞா் வேலூா் நாராயணன் (ஐம்பெருங்காப்பியங்களில் தமிழா் வாழ்வியல்), பேராசிரியா் அப்துல் காதா் (சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு) ஆகியோா் இந்த விருதைப் பெற்றுள்ளனா்.
இந்தமுறை ‘மணிமேகலை பேசும் மனிதநேயம்’ எனும் ஆய்வுத் தலைப்பு வழங்கப்படுகிறது. இந்த தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பிடிஎஃப் வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சிறந்த ஆய்வுரைக்கான தெரிவு அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்.1-ஆம் தேதி வெளியாகும். இதைத் தொடா்ந்து கவிக்கோ மன்றத்தில் பிப்.20-ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இது குறித்து மேலும் தகவல்களைப் பெறுவதற்கு முனைவா் சா.உதயசூரியன் (93603 12519), முனைவா் மஞ்சுளா (90031 00888) ஆகியோரை செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.