ராமேசுவரம்: மஹாளய அமாவாசையையொட்டி ராமேசுவரத்துக்கு வந்திருந்த குறைந்தளவு பக்தர்கள் அங்குள்ள சங்குமால் கடலில் புதன்கிழமை புனித நீராடினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு மஹாளய அமாவாசையையொட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் அவர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், அக்னி தீர்த்தக்கடலில் நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதையடுத்து, அக்னி தீர்த்தக் கடல் பகுதிக்கு பக்தர்கள் செல்ல முடியாதவாறு காவல்துறையினர் தடுப்புவேலி அமைத்தனர். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், போலீஸார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ராமேசுவரத்தில் புனித நீராடி தரிசனம் செய்ய குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர். அக்னி தீர்த்தக் கடல் பகுதிக்கு செல்ல முடியாத நிலையில், அவர்கள் சங்குமால் கடலில் புனித நீராடினர். மேலும் ராமநாதசுவாமி கோயில் முன்பகுதியில் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதே சமயம் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராட பக்தர்கள் அங்கும் இங்குமாய் சென்ற வண்ணம் இருந்தனர்.