ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது. அரசின் விதிமுறைகள் அமலில் உள்ளதால் செப்பு தேரோட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா மிகச்சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டுக்குரிய பிரமோற்சவ கொடியேற்று விழா இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க கொண்டுவரப்பட்டது.
பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பிரமோற்சவ கொடியை ஆண்டாள் கோவில் அர்ச்சகர் ரகுராமபட்டர் ஏற்றினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவில் சன்னதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பொதுவாக பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்ற பிறகு தினமும் சாமி வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெறும். தினமும் பல்வேறு மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முத்தாய்ப்பாக செப்பு தேரோட்டம் நடைபெறும்.
ஆனால் அரசின் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் வளாகத்திலேயே எல்லாம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. செப்புத் தேரோட்டமும் நடைபெறாது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற பிரமோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இன்று வியாழக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழா ஒன்பது தினங்கள் அதாவது 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.