விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 
விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிச் சிறப்பித்தார்.

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், T-63 பிரிவில், 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலை;

2020-ம் ஆண்டு சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாகக் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மேற்கண்ட போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 12 லட்சம் ரூபாய், என மொத்தம் 92 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

2021-ம் ஆண்டு சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி மற்றும் பா.சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ.ஷ்யாம் சுந்தருக்கு 3 லட்சம் ரூபாய், என மொத்தம் 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

கடந்த 4.3.2019 முதல் 15.3.2019 வரை கஜகஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கக் குழு வாகையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக பா.அதிபனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ப.இனியன், 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வி.வர்ஷினி மற்றும் பி.வி.நந்திதா ஆகியோருக்குத் தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

2020-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ்.ரத்தன்வேல் மற்றும் மு.பிரனேஷ், 2021-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா.சவிதா ஸ்ரீ ஆகியோருக்குத் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என, மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார்".

இந்த நிகழ்வின்போது விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com