அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே, காகிதத்தில் கொடுக்கப்படுவது ஏன்? மா சுப்ரமணியன் விளக்கம்

அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் போட முடியாத நிலை என்று கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே காகிதத்தில் கொடுக்கப்படுவது ஏன்? மா சுப்ரமணியன் விளக்கம்
அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே காகிதத்தில் கொடுக்கப்படுவது ஏன்? மா சுப்ரமணியன் விளக்கம்

பத்தாண்டு காலம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த முன்னாள் துணை முதல்வர் மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கியதை தலைப்பு வாரியாகக் கூட பார்க்க தெரியாமல் தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் போட முடியாத நிலை என்று கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை இராஜீவ்காந்தி அரசு  பொதுமருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (07-10-2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இரண்டு எண்ணிக்கையில் 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  தருமபுரியைச் சேர்ந்த காவலர் வேலுச்சாமி என்பவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று முகம் மற்றும் தாடை சிதைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 4-9-2021 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் மருத்துவர் சி.பிரசாத், எஸ்.பி.சேதுராமன், மருத்துவர் என்.ஏ.குணசேகரன் மருத்துவக் குழுவினர் சிறப்பாக செயல்பட்டு கிசிச்சை அளித்து காவலரை காப்பாற்றி இன்று மருத்துவமனையில் இருந்து நலம் பெற்று இல்லம் அனுப்பி வைக்கப்படுகிறார். 

வீட்டிற்குச் சென்ற பிறகும், தொடர்ந்து சிகிச்சைப் பெறுவதற்கு மருத்துவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கிசிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினரை நானும், மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் அனைவரும் பாராட்டியுள்ளோம். இராஜீவ்காந்தி மருத்துவமனை பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெரும்பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் மாநில அரசு, தனியார் தொண்டுநிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உதவியோடு ஆக்ஸிஜன் தேவையில் இன்று தமிழ்நாடு தன்னிறைவுப் பெற்று விளங்குவதற்கு எல்லோருமே கைக்கொடுத்தார்கள். மத்திய அரசு சார்பில் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா முழுவதும் 736 மாவட்டங்களில் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 1,222 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் கேர் நிதியுதவியின் கீழ் அமைக்கப்படும் ஆலைகள் தமிழகத்தில் 70 இடங்களில் நிறுவப்படுகிறது. அதனை இன்று 11 மணியளவில், மத்திய அரசின் பிரதமர் காணொளி வாயிலாக ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை பயன்பாட்டிற்கு ஒப்படைக்கிற நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இந்த ஆலைகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும், அதை தமிழக மருத்துவத்துறை சமாளிப்பதற்கு வசதியாக இருக்கும். தமிழக முதல்வரின் முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஏற்கெனவே 77 ஆக்ஸிஜன் ஆலைகள் அரசு மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் திறக்கப்பட்டு அது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரயில்வே வாரிய மருத்துவமனைகளில் நான்கும், என்.எல்.சி.யில் பத்தும், தமிழகம் முழுவதும் 222 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் இருந்து வருகிறது. மேலும் 1 மருத்துவ ஆலையில் 2 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையை சமாளிப்பதற்கு தேவையான மனிதத் திறன் என்பது மிக சிறப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா 150 இடங்கள் வீதம் மருத்துவ மாணவர் சேர்க்கை கோரிக்கையை தமிழக முதல்வ, பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதத்தின் வாயிலாகவும், நேரிலும் தெரிவித்ததன் அடிப்படையிலும், நானும், மருத்துவத் துறையின் செயலாளர் அவர்களும் நேரில் சென்று மனு அளித்து ஆய்வுக்குழு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. 
ஆய்வுக்குழுவும் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு 850 இடங்களுக்கு மருத்துவச் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 800 இடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதில் நாமக்கல், இராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வுக்குழுவினர் சிறிய சிறிய குறைபாடுகளை குறிப்பிட்டிருந்தனர். அவையெல்லாம் கடயத 10 நாட்களாக நிவர்த்தி செய்யப்பட்டு அதற்கான ஆவணங்களும், அதேப்போல் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆய்வுக் குழுவினர் சிறிய குறைபாடுகளைச் சொல்லியிருயதனர். அவையும் சரி செய்யப்பட்டு அதற்கான ஆவணங்களை மருத்துவக் கல்வி இயக்குநர் இன்று டெல்லிக்குச் சென்று, சம்மந்தப்பட்ட மத்திய அரசின் அலுவலர்களைச் சந்தித்து எடுத்துச்சொல்லி நாமக்கல், இராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிலுவையில் வைத்திருக்கிற தலா 50 இடங்களை ஒப்புதல் அளிக்கவும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு உடனடியாக ஆய்வுகுழு அனுப்பவும் கேட்க உள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியோருக்கு மருத்துவச் சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் நான் ஆய்வு மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம், ஓங்கோல் என்ற பகுதியில் இருந்து ஒரு குழந்தை கிசிச்சைப் பெறுவதை பத்திரிக்கையாளர்கள் நீங்களே நேரில் பார்த்தீர்கள். அந்த அளவுக்கு வெளிமாநிலத்தவரும், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ளும் அளவில் சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்தவாரம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே செய்யப்பட்டு, அதன் முடிவு பேப்பரில் வழங்கப்படுகிறது என்கிற புகார் ஓரிரு ஊடகங்களில் பெரிதுப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எக்ஸ்ரே என்பது டிஜிட்டல் மையமாகிவிட்டது. எக்ஸ்ரே எடுக்கப்படுவது வாட்ச் அப் மூலம் தொடர்புடைய மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டு அதில் அவர்கள் பார்த்து கண்காணித்துக்கொள்கின்றனர்.

என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பேப்பரில்தான் எழுதிக் கொடுக்கிறார்கள். இது அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. ஆனால் இரண்டு தொலைக்காட்சிகளில் நிதிச்சுமையின் காரணமாக, பிலிம்க்கு பதிலாக பேப்பரில் எழுதிக் கொடுப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் எல்லா இடங்களிலும் எக்ஸ்ரே பிலிம் கையில் கொடுப்பது என்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தனியார் மருத்துவமனைகளில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

விபத்து போன்ற நேரங்களில், ஆவணங்களின் முக்கியத்துவம் கருதி மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் காரணங்களினால், ஆவணங்களுக்காக பிலிம்மில் எக்ஸ்ரே முடிவு வழங்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் தெரியாமல் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஏதோ நிதிச்சுமையின் காரணமாக பிலிம்க்கு பதிலாக பேப்பரில் வழங்கப்படுவதாக, அதைப் பெரிதுப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனக்கு நன்றாக தெரியும். எனது மகன் மருத்துவர் இளஞ்செழியன் அவர்கள் ரேடியோலாஜி மருத்துவர். லண்டனில் எஃப்.ஆர்.சி.ஆர்., டி.டி.ஐ.ஆர், எம்.டி. ரேடியோலாஜி படித்து, தங்கப்பதக்கம் பெற்றவர். உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நான்கைந்து பட்டங்களைப் பெற்றவர். இலண்டனில் டெலி – ரேடியோலாஜி என்கிற அமைப்பை வைத்து நடத்துகிறார். இலண்டனில் 200 மருத்துவமனைகளில் இருந்து அவருடைய கணினிக்கு எக்ஸ்ரே முடிவுகள் வரும். அவர் அதைப் பார்த்து குறிப்பெடுத்து பிறகு அனுப்புவார். இப்படி டெலி-ரேடியோலாஜி முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கிறது.

இப்போது யாரும் எக்ஸ்ரே முடிவுகளை கையில் எடுத்துக்கொண்டு செல்வதில்லை. விஞ்ஞானம் இப்படி வளர்ச்சியடைந்த நிலையிலும், தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்று செய்தி வெளியிடுவது முறைதானா? என்பதை ஊடகங்கள் பரிசீலிக்க வேண்டும்.

அரசின் சார்பில் ஏழை, எளியோருக்கு மருத்துவம் அளிப்பதற்கு, ஊடகங்கள் மருத்துவச் சேவை செய்வதற்கு உதவ வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இப்படி பிலிம்கள் வழங்கப்படுவதில்லை என்று வதந்திகளைப் பரப்பினால் மக்கள் சிகிச்சைப் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு வருவார்களா? என்பதை யோசிக்க வேண்டும்.

இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். தொலைப்பேசி மூலம் எங்களுக்கு தெரிவித்தால், உடனே அதை சரி செய்துவிடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மருத்துவத்திற்கு தாம் பட்ஜெட் நிதி ஒதுக்கியபோது 19,420 கோடி மருத்துவத் துறைக்கு ஒதுக்கியதாகவும், தற்போது 18,933 கோடி ஒதுக்கப்பட்டு, 487 கோடி ரூபாய் நிதி குறைவாக மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை தலைப்பு வாரியாக அவர் பார்க்க வேண்டும். மருத்துவத்திற்கு எவ்வளவு நிதிஒதுக்கப்பட்டிருக்கிறது? மருந்துத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? மருத்துவப் பராமரிப்புப் பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது ? என்று பல்வேறு தலைப்புகளின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் எந்த நிதியிலாவது, நீங்கள் மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கியதற்கும், இப்போது ஏதாவது ஒரு பிரிவில் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட முடியுமா? ஒட்டுமொத்தமாக 487 கோடி குறைவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மினி கிளினிக் என்று ஆரம்பித்தீர்கள். அதற்கு 144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உங்கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் செவிலியர்களுக்கு சம்பளம் என்று அறிவித்தீர்கள். செவிலியர்களை எங்கே பணியமர்த்தினீர்கள். நீதிமன்றம் செவிலியர்களை எடுக்க தடை விதித்தது. எங்கே செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கினீர்கள்? ஒரு செவிலியர்களைக் கூட நியமிக்கவில்லை. இல்லாத செவிலியர்களுக்கு ஏன் 487 கோடி நிதி ஒதுக்க வேண்டும்? ஏற்கெனவே அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கோவிட் நிதியின் கீழ் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசிடமிருந்து நானும், துறையின் செயலாளர் அவர்களும் கோவிட் மறு சீரமைப்பு  பணிகளுக்கு ரூ.800 கோடி அளவில் நிதியைப் பெற்றிருக்கிறோம். இந்த நிதி மறு மதிப்பீடு செய்தப் பிறகுதான் சேரும்.

இன்னும் 4900 செவிலியர்களை நியமிக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு சம்பளம் கூட இந்நிதியின் கீழ்தான் வழங்கப்படும். அப்போதுதான் இது நிதிநிலை அறிக்கையின்கீழ் எவ்வளவு நிதி அளிக்கப்படுவது தெரிய வரும். இவையெல்லாம் தெரியாமல் 10 ஆண்டுகாலம் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, ஏதோ தொலைக்காட்சியில் வந்த செய்திகளை வைத்து அறிக்கை விடுவது ஆரோக்கியமல்ல? உங்கள் ஆட்சியில் பிபிஇ கிட் ரூ.385 ரூபாய்க்கு வாங்கினீர்கள், தற்போது 139.50 பைசாவிற்கு வாங்கப்படுகிறது. சாப்பாட்டிற்கு ரூ.550 கொடுத்தீர்கள். தற்போது ரூ.350 செலவழிக்கப்படுகிறது.

மருத்துவர்களுக்கு விடுதி தங்குமிடம் உணவுக்கு ரூ.900 ரூபாய் ஒதுக்கினீர்கள். தற்போது அது ரூ.750ஆக வழங்கப்படுகிறது. அதுபோல் முகக்கவசம் 9 ரூபாய் 80 காசுக்கு வாங்கினீர்கள். இப்போது 85 காசு தொடங்கி 1 ரூபாய் 15 காசுக்கு வாங்கப்படுகிறது. கூடுதலாக நிதி ஒதுக்கினோம் என்று சொல்கிறீர்கள். இதில் எதிலாவது குறைவாக நிதி ஒதுக்கினோம் என்று சொன்னால், நேராக விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதையெல்லாம் மறைத்துவிட்டு, அரசு மருத்துவமனைமீது வதயதிகளை இரண்டு தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் பரப்புவதை நிதியமைச்சராக இருந்தவர் செய்யலாமா? என்று  அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com