தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 755 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 1,577 கிராம ஊராட்சித் தலைவா்கள், 12,252 கிராம ஊராட்சி உறுப்பினா்கள் பதவிக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) நடைபெற்றது. 41 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், பதிவான வாக்குகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் காஞ்சிபுரம் - 84.30, செங்கல்பட்டு - 66.71, வேலூா் - 77.63, ராணிப்பேட்டை - 80.89, திருப்பத்தூா் - 78.88, விழுப்புரம் - 83.66, கள்ளக்குறிச்சி - 82.25, திருநெல்வேலி - 70.81, தென்காசி - 73.96 சதவீதம் என மொத்தம் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த வாக்குப்பதிவின்போது தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் வார்டு எண் 2 மற்றும் 3-க்கென பொதுவாக அமைக்கப்பட்ட இருவார்டு வாக்குச்சாவடி எண்.130 (அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி)-ல் 2வது வார்டுக்கான உறுப்பினர் பதவியிடம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வார்டைச் சார்ந்த 45 வாக்காளர்கள் மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலுக்காக வாக்களித்திருப்பதாக தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தொலித்து வார்டு-3 -ல் மறுதேர்தல் நடத்திட அனுமதி கோரியதன் அடிப்படைமில் சிவசைலம் கிராம ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு மட்ரும் 9.10.2021 அன்று மறுவாக்குப்பதிவு நடத்திட ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.