புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தது.
மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்து பணிகளை மேற்கொண்டது.
இதனிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதிக்கீடில் குளறுபடி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய அறிவிப்பை ரத்து செய்தும், இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்து, ஒரு வாரத்தில் மீண்டும் தேர்தலை அறிவிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்ட தகவலில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவித்த 2019 ஆம் ஆண்டின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகள் சீரமைத்து, புதிய தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.