புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்தநிலையில் புதுச்சேரியில் அவசரமாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தினங்களில், பண்டிகை காலங்கள் மற்றும் வார்டு இட ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகள் உடன் தேர்தல் நடைபெற எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக தேர்தல் துறையில் முறையிட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமையில் அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடிகளை களைய வேண்டும், பண்டிகை காலங்களில் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை சீரமைக்க வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை கேட்டறிந்து, தேர்தல் துறை செயல்பட வேண்டுமென கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.