சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 4 ஆவது வார சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில், ஒருக்காமலையில் உள்ள குடைவரை கோயிலில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் பாதங்கள், திருநாமங்களான சங்கு, சக்கரங்களுக்கும் புரட்டாசி மாத 4 ஆவது வார சனிக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப் பெருமாள் சுவாமிகள், அதே கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் கோயிலில் அதிகாலையில் கோயில் அர்ச்சகர்களால் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படி அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்கள் மட்டுமே பூஜைகளை செய்தனர்.