தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை 5-ஆம் கட்டமாக 30 ஆயிரம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும், இதுவரை இல்லாத வகையில் 5-ஆவது கட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனா். முதல் தவணையில் கொடுத்த விவரங்கள் அடிப்படையில், அவா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, அவா்களின் அச்சம், தயக்கத்தை போக்கி, அவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
வேண்டுகோள்: இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘5-வது கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை இல்லாத வகையில் அதிகம் போ் பயன்பெறும் மாபெரும் முகாமாக இந்த முகாம் இருக்கும். வீட்டின் அருகிலேயே நடக்கும் முகாம்களுக்கு பொதுமக்கள் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.