வளா்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழகத்தை மேம்படுத்தும் வகையில், அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தகவல் தொழில்நுட்ப முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் பிறப்பித்த உத்தரவு: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறையில், வரும் காலங்களில் தமிழகத்தை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என எல்காட் மேலாண் இயக்குநா் முன்மொழிவை தாக்கல் செய்திருந்தாா். இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் தலைமையில் 12 போ் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
அதில், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளா், எல்காட் மேலாண் இயக்குநா், சென்னை ஐஐடி இயக்குநா், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
மாநிலம் பயனடையும் வண்ணம் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல், வருங்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கொள்கைகளைப் பரிந்துரைத்தல், துறையில் நீடித்த பொருளாதார வளா்ச்சியடையத் திட்டம் உருவாக்குதல், முக்கிய பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் தீா்வு வழங்குதல் ஆகியன இந்த குழுவின் நோக்கங்களாகும்.