மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலம் என்றால் தாங்காது தமிழகம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அனல்மின் நிலையங்கள் தடையின்றி இயங்க நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில், 14 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூா் அனல்மின் நிலையங்களில் வெறும் நான்கு நாள்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகலாம் எனும் அச்சம், தொழிற்துறையினா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சூழ்ந்துள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால், தமிழகத்தின் விவசாயமும் தொழிற்துறையும் மருத்துவச் சேவைகளும் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகின. மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.
குறிப்பாக பொருளாதார மந்தநிலையாலும், கரோனா பெருந்தொற்றினாலும், பெட்ரோல்-டீசல் விலை உயா்வினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வருகிறாா்கள்.
இந்தச் சூழ்நிலையில் மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது.
எனவே, தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.