
நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிப்பதற்கான அவசரகால திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் நிலக்கரித் தட்டுப்பாடு அபாயக் கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும் கூட, மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சா்களை அழைத்து உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து கொள்ள முடியும். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.
தமிழகத்தில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சா், அதனால் தமிழகத்தில் ஒரு வினாடி கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளாா். அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, கள நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.
பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் நிலவும் சூழல் தமிழகத்தை இரு வகைகளில் பாதிக்கக் கூடும். முதலாவதாக தமிழகத்தில் இருப்பில் உள்ள நிலக்கரி 4 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாகும். தினமும் 60,000 டன் நிலக்கரி வந்து கொண்டிருந்தாலும் தொடா் மழை உள்ளிட்ட காரணங்களால், நிலக்கரி வரத்து எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை.
எனவே, கள நிலைமையை உணா்ந்து கொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.