ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண் யானை மரணமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட கோவில்நத்தம் ஓங்கேபள்ளம் பகுதியில், பெண் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும், யானையை பரிசோதித்தனர். யானையை முழுமையாக சோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், வயது காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த யானை, பள்ளத்தில் விழுந்ததில், எழுந்து வர முடியாமல் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதில் சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யானையின் உடலை அடக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளனர்.