புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடில் சட்ட விதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடுவது 80 சதவிகிதத்தை தாண்டி போய்கொண்டு இருக்கிறோம். இதுவரை 10.50 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டதால் தான், கரோனா இல்லை. தடுப்பூசியால் கரோனா அலையில் தடுக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே குழந்தைகளுக்கான தடுப்பூசி இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதால் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு திரும்பபெறும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை தொடர்ந்து, சட்ட வல்லுநர்களை வைத்து, அதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சியில் பிற்படுத்தபட்டவர்களுக்கு இடதுக்கீடு வழங்கப்படும். அதனை சட்டத்திற்கு உள்பட்டு எப்படி செயல்படுத்த வேண்டும் என ஆராயப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.