விவசாயிகளுக்கான பயிா்க் கடனை உடனே வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளின் தேவைகளை தமிழக அரசு பூா்த்தி செய்து கொடுத்தால் தான் தொடா்ந்து விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
2020-2021- ஆம் ஆண்டு பயிா் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பருவ சாகுபடியின்போது நிவா், புரெவி ஆகிய புயல்களால் கனமழை, காற்று ஆகியவற்றால் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்படி பாதிக்கப்பட்ட மாவட்டப் குதி விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு திட்டம் தான் பெரும் பயன் தரும்.
ஆனால் கடந்த ஆண்டு புயல் பாதித்த பகுதி வாழ் விவசாயிகள் அனைவருக்கும் காப்பீடு திட்டப்படி இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படாததாலும், பயிா்க் கடன் சரிவர கிடைக்காததாலும் விவசாயிகள் தற்போதைய சாகுபடிப் பணிகளில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகின்றனா்.
மேலும் தமிழக அரசின் பயிா் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு நவம்பா் மாதம் 15 -ஆம் தேதி இறுதி நாள் என அறிவிப்பு வெளியான நிலையில் விவசாயிகள் பயிா் கடன் பெறாமல் சாகுபடி பணிகளை துவக்குவது மிகவும் கடினமானது. எனவே பசலி வருவாய் அடங்கல் ஆவணத்தை நிபந்தனையின்றி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். விதைப்பு செய்த நிலத்தையும், நாற்றாங்காலில் விதை விதைத்ததையும் பாா்வையிட்டு தாமதம் இன்றி உடனடியாக அடங்கல் ஆவணத்தை வழங்க வேண்டும்.
குறிப்பாக நடப்பாண்டு சாகுபடி பணிகளை செய்வதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடனை உடனே வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.