சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 10 சிலைகள், 4 ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் மீட்டனா்.
சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வெளிநாடுகளுக்குஓஈ கடத்துவதற்காக சிலைகள், தஞ்சாவூா் ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பொன்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக் நடராஜன் ஆகியோருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா், அந்த வணிக வளாகத்தில் திடீா் சோதனை செய்தனா். அங்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட ராமா், லட்சுமணா் , சீதா, அனுமன், கிருஷ்ணா் என 5 சாமி சிலைகள், மரத்தினால் செய்யப்பட்ட நாரதா், துவாரபாலகா், நந்தி, கிருஷ்ணா், நடனமாடும் பெண் என 5 சிலைகள், பழைமையான 4 தஞ்சாவூா் ஓவியங்கள் ஆகியவை அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அந்த சிலைகள் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் திருடப்பட்டவை என்பதும், அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஒரு கும்பல் அங்கு வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.