கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது.
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார். புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்?.
கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா?. அதிமுக பொன்விழா எழுச்சியுடன் நடைபெறுவது சசிகலாவிற்கு பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நினைவில்லத்தில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சசிகலா நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.