கடலூர் திமுக எம்பி ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு;  கைதான 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்

கடலூர் மக்களவை உறுப்பினர் டி.வி.ஆர்.எஸ். ரமேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு நாளைக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்.உ
திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்.உ


கடலூர்: கடலூர் மக்களவை உறுப்பினர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு நாளைக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
 
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஸுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராசு என்ற பாமக நிர்வாகி கடந்த செப்.19 ஆம் தேதி இரவு மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு கடலூர் சிபிசிஐடி வசம் சென்றது. விசாரணை நடத்திய சிபிசிஐடி காவலர்கள் அக்.9 ஆம் தேதியன்று மக்களவை உறுப்பினர் ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து எஸ்.ரமேஷ் உதவியாளர் நடராஜன், அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். ரமேஷ் தலைமறைவான நிலையில் பண்ருட்டி நீதிமன்றத்தில் அக்.11 ஆம் தேதி ஆஜரானார்.

நீதிபதி உத்தரவை தொடர்ந்து அவர் கடலூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அக்.13 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது, சிபிசிஐடி  காவலர்கள் அவரை 2 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கோரினார். எனினும், 24 மணி நேரம் மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

பின்னர் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் எம்.பி. தரப்பில் ஜாமீன் கேட்டு  வழக்குரைஞர் சிவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது நீதிபதி  செந்தில்குமார் விசாரணை நடத்தினார். அப்போது, கோவிந்தராசு மகன் செந்தில்வேல் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஆட்சேபனை மனு தொடர்பான விபரங்கள் தனக்கு அளிக்கப்படாததால் அந்த மனுவை படித்துப் பார்க்க ஒரு நாள் அவகாசம் கேட்டார் வழக்குரைஞர் சிவராஜ்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், செந்தில்வேல் தரப்பு வழக்குரைஞர் தமிழரசன் ஆகியோர் ஆட்சேபனை தெரிவிக்காததை தொடர்ந்து மனு மீதான விசாரணையை நாளை சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார். கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

5 பேர் ஆஜர்:

இதற்கிடையில், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரும் கடலூர் கிளை சிறையில் இருந்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி (பொ) சிவபழனி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, 5 பேரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நீதிபதி, நாளை சனிக்கிழமைக்கு தள்ளி வைத்தார். அப்போதும், 5 பேரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சிறையை மாற்ற மனு:

இதற்கிடையில் கோவிந்தராசு மகன் செந்தில்வேல் சிறைத் துறை தலைவருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், கொலை வழக்கில் கைதானவர்களை கடலூர் மத்திய சிறையில் அடைப்பது வழக்கம். ஆனால், மக்களவை உறுப்பினரான எஸ்.ரமேஷ் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய மற்றும் கிளை சிறைகள் அவரது மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இதனால், அவர் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதோடு சாட்சியங்களை கலைக்கும் பணியையும் மேற்கொள்கிறார். எனவே, அவரை வேறு மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com