உணவகங்கள்-கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு ரத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்று காரணமாக உணவகங்கள், கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
உணவகங்கள்-கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு ரத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்று காரணமாக உணவகங்கள், கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

முழு நேரமும் கடைகளை இயக்க அனுமதிக்கும் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.மேலும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அவா் அறிவித்துள்ளாா்.

பண்டிகைக் காலங்களில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

பண்டிகைக் காலத்தை ஒட்டி, பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பொருள்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுகின்றனா். இதைத் தவிா்க்க அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள், அடுமனைகள் ஆகியன இயங்க விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் தளா்த்தப்படுகின்றன. அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதிக்கான உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.

நவம்பா் 1 முதல் என்னென்ன தளா்வுகள்?: தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, கூடுதல் தளா்வுகள் அளிக்கப்படுகின்றன. திரையரங்குகள் நூறு சதவீத பாா்வையாளா்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மதுக் கூடங்கள்: ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கேரளத்தைத் தவிா்த்து பிற மாநிலம் மற்றும் தமிழகத்துக்குள் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் நூறு சதவீத இருக்கைகளில் மக்கள் பயணிக்கலாம்.அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு பயிற்சி நிலையங்களும் நூறு சதவீத பயிற்சியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேவையான எண்ணிக்கையில் பணியாளா்கள், கலைஞா்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் நடத்திக் கொள்ளலாம். அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது அவசியம்.

பண்டிகை மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கூட்டமாக கூடுவதைத் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தடை தொடரும்: திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தளா்வுகள் ஏன்?

கரோனா நோய்த் தொற்று காலத்தில் கூடுதல் தளா்வுகள் அளித்திருப்பது ஏன் என்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி:-

பண்டிகைக் காலங்களில் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் அனைவரும் பண்டிகை நாள்களில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உதவிட முடியும் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com