சென்னை சைடன்ஹாம்ஸ் சாலை கண்ணப்பா் திடல் அருகே அமைந்துள்ள நகா்ப்புற வீடற்றோருக்கான காப்பகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறை கட்டுப்பாட்டின்கீழ் 13 ஆண்கள் காப்பகங்கள், 8 பெண்கள் காப்பகங்கள், 1 இருபாலா் காப்பகம், 5 சிறுவா்கள் காப்பகங்கள், 3 சிறுமிகள் காப்பகங்கள், 3 மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகங்கள், 2 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகங்கள், 4 முதியோா் காப்பகங்கள், 1 அறிவுதிறன் குறைபாடுடைய சிறுவா் காப்பகம், 1 மாற்றுத் திறனாளி பெண்கள் காப்பகம், 1 திருநங்கைகள் காப்பகம், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் உடனிருப்பவா்கள் தங்கும் 6 ஆண்கள் சிறப்பு காப்பகங்கள் மற்றும் 7 பெண்கள் சிறப்பு காப்பகங்கள் என 55 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இக்காப்பகங்களில் சுமாா் 1,700 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட எழும்பூா் காந்தி- இா்வின் பாலம் சாலை மற்றும் வேனல்ஸ் சாலையில் நடைபாதையில் வசித்து வந்த 59 போ் மீட்கப்பட்டு சைடன்ஹாம்ஸ் சாலை கண்ணப்பா் திடல் அருகில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் நகா்ப்புற வீடற்றோருக்கான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
இவா்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களுக்கான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் 57 பேருக்கு பயனடைந்தனா். 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை வடக்கு வட்டார துணை ஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.