தெற்கு வங்கக் கடலின் மத்தியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 3 நாள்களில் தமிழக கடற்கரையை அடையும் என்றும் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தெற்கு மாநிலங்கள் மழை பெறும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் பெருமளவு மழை பெறுகின்றன.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.