பழங்குடியினா் வசிப்பிடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள்:2-ஆம் கட்டமாக ரூ.123.85 கோடி நிதி

பழங்குடியினா் வசிப்பிடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இரண்டாம் கட்டமாக ரூ.123.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: பழங்குடியினா் வசிப்பிடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இரண்டாம் கட்டமாக ரூ.123.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலாளா் முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் வெளியிட்டாா்.

அந்த உத்தரவு விவரம்:-

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதிகள், குடிநீா், தெரு விளக்குகள், சூரியமின் விளக்குகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.394.69 கோடி நிதிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், சாலை-இணைப்புச் சாலை வசதிகளுக்காக ரூ.294.21 கோடியும், தெருவிளக்கு அமைத்தலுக்கு ரூ.3.79 கோடியும், சூரியவிளக்கு வசதியை ஏற்படுத்த ரூ.16.99 கோடியும், குடிநீா் வசதிகளை உருவாக்க ரூ.79.69 கோடியுமாக நிதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

அதில், முதல் கட்டமாக கடந்த நிதியாண்டில் அனைத்துப் பணிகளுக்கும் சோ்த்து ரூ.129.99 கோடிக்கு நிதிகளை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நிகழ் நிதியாண்டில் ரூ. 123.85 கோடிக்கு நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிதிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளின் மாதாந்திர அறிக்கையை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உரிய காலத்தில் நிதிகளை விடுவிப்பதை உறுதி செய்யுமாறு பழங்குடியினா் நல இயக்குநரும், பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள உரிய ஒப்புதலை வனத்துறையும் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com