அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகே கோயில் நகைகள் உருக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இண்டிக்ட் கலெக்டிவ் என்ற அமைப்பு, கடந்த 11 ஆண்டுகளாக கோயில் நகைகள் மதிப்பீடு செய்யப்படாத நிலையில் தற்போது திடீரென நகைகள் உருக்கப்பட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்திருப்பது சட்ட விரோதமாக இருப்பதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும் காணிக்கையாக வந்த நகைகளை மட்டும்தான் உருக்கப் போவதாகத் தெரிவித்ததுடன் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழு இதனை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகே கோயில் நகைகள் உருக்கப்பட வேண்டும், அதுவரை கோயில் நகைகளை உருக்கத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் 3 பேர் கொண்ட குழு நகைகளை கணக்கெடுக்கும் பணியை தொடர எவ்வித தடையும் இல்லை என்று கூறி வழக்கின் விசாரணையை டிசம்பர் 15க்கு ஒத்திவைத்தார்.