தூத்துக்குடியில் கடந்த 15-ம் தேதி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுகொள்ளப்பட்ட தோட்டாக்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டம்புளி பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். இவர் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். தலைமறைவாக இருந்த துரைமுருகனை போலீஸார் தேடி வந்த நிலையில் தூத்துக்குடி முள்ளக்காடு உப்பள பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் கடந்த 15-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில் போலீசார் தேடி சென்று கைது செய்ய முயன்றபோது துரைமுருகன் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றார் அப்போது போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரைமுருகன் உயிரிழந்தார்.
இந்நிலையில் உடற்கூராய்வு செய்தபோது உடலில் சுடப்பட்ட தோட்டாக்கள் இல்லாத காரணத்தினால் சம்பவம் நடந்த பகுதியில் சுடப்பட்ட தோட்டாக்களை துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.