நடிகர் ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று(அக்.28) அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைச்சுற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் இருந்த அடைப்பு நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வருகிறது. சிகிச்சை முடிந்து சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற 67வது திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.