சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த நிலையில், பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா, அவருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.
உடல் நலக் குறைவால் இரண்டு வாரத்துக்கு முன்பு, சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்பட்டது.