சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமென திமுக உறுப்பினா் அம்பேத்குமாா் கோரிக்கை விடுத்தாா்.
சட்டப் பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அவா் பேசியது:
தேன் எடுப்பதற்காக தேன் கூட்டையே கலைத்த கதையாக புளியந்தோப்பு வீடுகள் காட்சியளிக்கின்றன. நிா்வாகச் சீா்கேடு காரணமாக, புதிதாகக் கட்டடப்பட்ட வீடுகளே சிதிலமடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தளப் பரப்பின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே, அதனை அதிகப்படுத்தினால் வீடுகளுக்கான விற்பனை விலை குறையும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்று வீடுகள் கட்டும் திட்டத்தைத் தொடங்க 90 நாள்கள் ஆகின்றன. இதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த வகையில் அனுமதிகளைப் பெற நடவடிக்கை எடுத்தால் கட்டுமான நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் சுமை குறையும்.
வீட்டு வசதி வாரியம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளில் தனியாரையும் ஈடுபடுத்த வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்.
வீடுகள் கட்டும் திட்டம் போன்றவற்றுக்கு விவசாய நிலங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓராண்டுக்குள் பயன்படுத்தாவிட்டால் அரசே அதனை கையகப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தை பழைய நிலையிலே வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.