தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மாற்றியமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:
13 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாலும், புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாலும் அந்த 19 மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவமனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும். அவை எந்தெந்த மருத்துவமனைகள் என்கிற விவரத்தை முதல்வா் பிறகு வெளியிடுவாா்.
காட்பாடியில்....:
வேலூா் மாவட்டம் காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்படும்.
முதியோருக்குப் புற்றுநோய் பரிசோதனை: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட முதியோா்கள் அனைவருக்கும் அவா்கள் எந்த நோய்க்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாலும் புற்றுநோய் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் செய்யப்படும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதியோா் மற்றும் மனநலம் குன்றியவா்களுக்கு அறிவாற்றல் மறுவாழ்வுக்காக தினசரி பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தாய்ப்பால் வங்கிகள்: தாய்ப்பால் வங்கிகள் 12 அரசு மருத்துவமனைகளில் ரூ.1.20 கோடி செலவில் நிறுவப்படும்.
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் மேக்னாவிசன் உபகரணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.42 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றாா்.