மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 13,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 68.67 அடியிலிருந்து 68.55அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,871 கன அடியிலிருந்து 13,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.47 டி.எம்.சி.யாக உள்ளது.
வியாழக்கிழமை இரவு 32.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.