வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர் இழுத்த செக்கிற்கும், அவரது திருவுருவ படத்திற்கும் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல மாவட்ட ஆட்சியர் சமீரன்,பா.ஜ.கட்சியின் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா, சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அர.சக்கரபாணி :
வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் கூறியதன் அடிப்படையில் வ.உ.சிதம்பரனாரின் அருமைகளை போற்றுகின்ற வகையில் ஒரு ஆண்டுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கோவையில் அவருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட உள்ளது. பல்வேறு இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.
மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் கண்காட்சி பேருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவை நஞ்சப்பா சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் மற்றும் கோவையில் ஏதாவது ஒரு மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சிதம்பரனார் பேரவை அமைப்பினர் வைத்துள்ளனர். அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என்றார்.