அவிநாசி: குன்னத்தூர் அருகே பொளையம்பாளையத்தில் தம்பதியர் விஷ மாத்திரை சாப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குன்னத்தூர் பொளையாம்பாளையம் பண்ணாரி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி (65). இவரது மனைவி சுமதி (55). இவர்களது மகன் ஜனனி(23). கோவை தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் காதல் திருமணம் செய்து கொண்டதாக, தந்தையின் செல்லிடபேசி எண்ணின் கட்செவிக்கு புகைப்படம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பொன்னுசாமி, சுமதி ஆகியோர் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாக தம்பதியர் வீட்டைவிட்டு வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகத்துடன் வீட்டைத் திறந்து பார்த்த போது, இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தம்பதியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து குன்னத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.