கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அனுபவ் ரவி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அதில் கொடநாடு வழக்கில் மேல்விசாரணை நடத்தத் தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொடநாடு வழக்கின் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திர இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
நீதிமன்ற அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேல்விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல்தான் செல்லும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவற்றை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.