அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு புறக்கணித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த வேளாண் விற்பனைக்குழு திரும்பப் பெறப்படும் என்று திமுக சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டுவர அனைத்தும் திட்டமிட்டு பணிகள் தொடங்கிய நிலையில் திமுக அரசு அதனை புறக்கணித்து வருகிறது.
சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு தினமும் மரியாதை செலுத்தி வந்தோம். ஆனால், அங்கிருந்த ஏணியை அகற்றிவிட்டார்கள்.
அதுபோல, 'தாலிக்குத் தங்கம்' திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை, எளிய பெண்களுக்கு கிடைக்காமல் வழிவகை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு பேரவையில் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களுடைய பேச்சையும் அவைகுறிப்பில் இருந்து எடுத்துவிட்டார்கள்.
அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு புறக்கணித்து வருகிறது என்று தெரிவித்தார்.