காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றமாக மாற்றியமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நீதி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள்:
காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட நீதிமன்றம் எண் 2, முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும். மயிலாடுதுறை மற்றும் திருப்பத்தூரில் இயங்கி வரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் மாவட்ட அமா்வு நீதிமன்றங்களாக மாற்றி அமைக்கப்படும்.
அருப்புக்கோட்டையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சியில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மற்றும் திருப்பத்தூரில் முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றங்கள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சாா்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ஆகிய இடங்களில் அனைத்து வசதிகளுடன் சாா்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குரைஞா்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.4.28 கோடி செலவில் கட்டப்படும்.