சென்னை: கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இதையும் படிக்கலாமே.. | காலத்தால் அழியாத திரைப்பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன்
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பக்கத்துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவைத் துணைத்தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை புலமைப்பித்தனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வயோதிகம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இந்த வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
இதையும் படிக்கலாமே..| புலமைப்பித்தனுக்கு மிகவும் பிடித்த பத்து: பதினைந்து முறை படித்த புத்தகம்!
தனியார் மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.