பத்திரிகையாளா்களுக்கு நல வாரியம் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் விருது அளிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
உழைக்கும் பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த பத்திரிகையாளா்கள் நல வாரியம் அமைக்கப்படும். இயற்கை எய்தும் பத்திரிகையாளா்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படும்.
பத்திரிகையாளா்களின் பணிகளை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
இளம் பத்திரிகையாளா்கள் இதழியல் துறையில் உயா் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி அளிக்கப்படும். சிறந்த இதழியலாளருக்கு கலைஞா் எழுதுகோல் விருது அளிக்கப்படும். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது என அமைச்சா் சாமிநாதன் அறிவித்தாா்.