தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கி.மு.8 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொற்கை இருந்துள்ளது.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவு வந்துள்ளது. கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கும் வைகைச் சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மௌரியப் பேரரசு காலத்திற்கு முந்தைய காசு கீழடியில் கிடைத்துள்ளது.
கீழடி நாகரிகம் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற, தொழில் சமூகமாக இருந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பெயர் பல்வேறு காலகட்டங்களில் பொருநை ஆறு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் செழித்தோங்கியுள்ளது என்றார்.