புது தில்லி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினரின் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் 06.10.2021 அன்று ஓய்வு பெறுகிறார். இதனால் இந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 15 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 22 (புதன்கிழமை).
வேட்புமனுக்கள் செப்டம்பர் 23 (வியாழக்கிழமை) அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27 (திங்கட்கிழமை) ஆகும்.
கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் போது கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.