தமிழகத்தில் காலியாகவிருக்கும் 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் காலியாகவிருக்கும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் அதிமுகவைச் சேர்ந்த வைத்திலிங்கமும் கே.பி. முனுசாமியும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனு பரிசீலனை 23ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு 27ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.