தமிழக சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேரவையின் இன்றைய கூட்டத்தில், தேர்தலின் நேரத்தில் எங்கள் மீது வேண்டுமென்றே பழிச் சுமத்துவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
கொலை, கொள்ளை நடந்த கொடநாடு சாதாரண இடமில்லை. அந்த குற்றங்களை எதில் சேர்ப்பது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது முதல்வராக இருந்த ஈபிஎஸ் என்ன செய்தார்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த இடத்திலிருந்து சிசிடிவி கேமராக்களை அகற்றப்பட்டது ஏன்? கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கொடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது சிசிடிவி ஏன் செயல்படவில்லை? கொடநாடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் தடைக் கோரி வழக்கு தொடர்ந்தது யார்?
முதல்வரின் கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி பேசியது:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு சொத்துக்கள் வேறு ஒருவருக்கு சென்றுவிட்டது. தனியார் சொத்துகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? என்றார்.