தூத்துக்குடி அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், தண்ணீர் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் பலியாகினர்.
தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள ரமேஷ் பிளவர் என்ற தனியார் உலர் பூக்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றுவதற்காக பாபு என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர், முதலிப்பட்டி, நடுவக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பின்னர் சில்லாநத்தம் பேருந்து நிலையம் அருகே சில பெண் தொழிலாளர்கள் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
அங்கிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில், புதூர் பாண்டியபுரத்தில் இருந்து புதியமுத்தூரை நோக்கி வந்த தண்ணீர் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி(45), காமாச்சி(40) முப்புள்ளிபெட்டியைச் சேர்ந்த சந்தியா(48) ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
கிராம மக்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மணிமேகலை(20) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து புதியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | திருமண விழாவில் சோகம்; மின்சாரம் தாக்கி சமையற்கலைஞர் மரணம்