சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்டுள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை வைத்து நைவேத்தியம் படைக்கப்பட்டன. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் வளர்ந்திருந்த களர்செடிகளை 'தண்ணீர் தண்ணீர்' அமைப்பு அறக்கட்டளைத் துணைத் தலைவர் பொன்.பழனியப்பன் தலைமையில் நிர்வாகி கிஷோர்பாபு உள்ளிட்ட பலர் அகற்றி தூய்மைப்படுத்தினர்.