சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானாது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 6 பேர் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவை சேர்ந்த பாலமுருகன்(55) என்பவருக்கு சொந்தமான வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இதே பகுதியைச் சார்ந்த சண்முகராஜ்(52), செல்வி (35), முத்துச்செல்வி(35) மூவரும் வெள்ளிக்கிழமை காலை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரொம்ப கோட்டை தீயணைப்புத் துறையினர் தண்ணீ வண்டி உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வெடி விபத்தில் லேசான காயமடைந்த முத்துச்செல்வி, செல்வி உள்ளிட்ட 5 பேரும் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்த சண்முகராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களால் வெடி விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.
மேலும் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் தாயில்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.