சேலத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் எல்லைபிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. உடனே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன்பு சிலை வைத்து, மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காவல்துறையினர் தடுப்பை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதால்,ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.