சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வேட்டை இந்து சமய அறநிலையத் துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு
அறிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பண்ருட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன், தனது தொகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த பிரச்னையை எழுப்பினார்.
இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில்:-
பண்ருட்டி தொகுதியில் 152 ஆக்கிரமிப்பு இடங்கள் உள்ளன. அதில் 75 வரை மீட்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள இடங்களை நில அளவை ஆய்வு செய்ய உள்ளோம். அதிலும் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்ட 75 இடங்களையும் ஒரு மாத காலத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை தனது வசம் கொண்டு வரும்.
இந்து சமய அறநிலையத் துறையில் வரலாறு காணாத அளவுக்கு நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறோம். நிலங்களை மீட்கும் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.