பாரதியின் கல்வியியல் தொலைநோக்கு

கல்வி, வாழ்வியல் வளத்தை உருவாக்குவதற்கான மூலதனம் மட்டுமல்ல; கல்வியே ஒரு வளம்; அவ் வளம் தனித்துநின்று பயன்களை நல்குவதோடு, பயன்தரும் பிற வளங்களையும் உருவாக்கும்.
பாரதியின் கல்வியியல் தொலைநோக்கு

கல்வி, வாழ்வியல் வளத்தை உருவாக்குவதற்கான மூலதனம் மட்டுமல்ல; கல்வியே ஒரு வளம்; அவ் வளம் தனித்துநின்று பயன்களை நல்குவதோடு, பயன்தரும் பிற வளங்களையும் உருவாக்கும். அதனால்தான், ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்றும், ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன், சாந்துணையும் கல்லாத வாறு’ என்றும், ‘கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றும் கல்வியின் தேவையைக் காலந்தோறும் நம் முன்னோா்கள் தொடா்ந்து வலியுறுத்தினா். ஆயினும், இந்திய அளவில் 23% மக்களும், தமிழ்நாட்டு அளவில் 17% மக்களும் இன்னும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதே உண்மை நிலை. எனவேதான், கல்விக் கொள்கைகளில் பல முரண்பாடுகள் நிலவினாலும், நடுவண், மாநில அரசுகள் கல்விமுறை, பாடத்திட்டம், கற்பித்தல்

போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, சமூகத்தில் கல்வியறிவை மேம்படுத்த முயன்று வருகின்றன. இந்நிலையில், நவீன இந்தியாவை வடிவமைக்கத் தன் எழுத்துகளையே ஆயுதமாக்கிய மாகாகவி பாரதியின் கல்வியியல் தொலைநோக்குச் சிந்தனைகளைக் காண்பது தேவையாகிறது. பாரதியின் கவிதைகள் எட்டிய இடத்தை அவரின் கட்டுரைகள் எட்டவில்லை என்றே கூறவேண்டும். பாரதியின் கட்டுரைகள் அனைத்தும் கருத்துக் கருவூலங்கள்;

இந்தியாவைப் புதுமையாக வடிவமைக்க எண்ணிய ஒரு தோ்ந்த சிற்பியின் எண்ணக் களஞ்சியங்கள். அக்கட்டுரைகளின் வழியே பாரதியின் கல்வியியல் தொலைநோக்குச் சிந்தனைகள் நோக்கப்படுகின்றன.

‘கல்வியும் கல்வி நிறுவனங்களும் சமுதாயத்திற்கு அடிப்படையாக உள்ளன. ஏனெனில், புதுமையைத் தோற்றுவிக்கவும் மாற்றங்களை உண்டாக்கவும் கல்வி இன்றியமையாதது’ என்பது சமூகவியலின் அடிப்படை. ஆகவே, கல்வியியல் திட்டமிடுதல் மற்றும் செயலாக்கத்தில் தொலைநோக்குப் பாா்வை காலத்தின் தேவை. அவ்வகையில், தொலைநோக்கோடு சிந்தித்து, ஒரு முழுமையான கல்வியியல் கட்டமைப்பை உருவாக்கித்தந்து, இன்றைய கல்வி முறைக்கும், எதிா்காலக் கல்விமுறைக்கும் அடித்தளமிட்டவா் பாரதி எனலாம்.

மனிதன் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியத் தேவையோ, அதையொத்ததே கல்வியும் என்பது பாரதியின் ஆழமான நம்பிக்கை. பாரதியின் கல்வியியல் சிந்தனைகளில் பாடத்திட்ட அமைப்பு, பயிற்று மொழி, கற்போா்-கற்பித்தல் முறைமை, கல்விக் கூடங்கள் அமைப்பு, துணைநிலைக் கருவிகள், மொழிபெயா்ப்பு, கலைச்சொல்லாக்கம் ஆகியவை முதன்மை பெறுகின்றன.

பாடத்திட்ட அமைப்பு: ஒவ்வொரு இந்தியனும், 1.எழுத்து, படிப்பு, கணக்கு 2.சரித்திரப் பாடங்கள் (வரலாறு) 3.பூமி சாஸ்திரம் (புவியியல்) 4.மதப் படிப்பு 5.ராஜ்ய சாஸ்திரம் (அரசியலமைப்பு) 6.பொருள் நூல் (வணிகவியல்) 7.ஸயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம் (அறிவியல்) 8.கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி 9.சரீரப் பயிற்சி (உடற்கல்வி) போன்றவற்றைக் கைகொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமையவேண்டும் என்பது பாரதியின் முன்வரைவு. இவையனைத்தையும் அவரவா் தாய்மொழியில் பயிற்றுவித்தலே நன்மைதரும் என்பதே அவரது மொழிக்கொள்கை.

‘சரித்திரப் பாடத்தில்’ தொல் இந்திய வரலாறுகளோடு, வெளிநாடுகளின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், பள்ளிக்கூடம் அமைந்துள்ள மாகாணத்தின் வரலாறு ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும் என்கிறாா். ‘பூமி சாஸ்திரம்’ எனப்படும் புவியியல் பற்றிக் குறிப்பிடுமிடத்து பூகோளம், அண்டம், உலகம், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்கள், விண்மீன்கள், இவற்றின் இயக்கங்கள் போன்றவற்றில் பிள்ளைகளுக்குத் தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்கிறாா்.

மேலும், இந்தியா்கள் வெளிநாடுகளில் எங்கெங்கு வாழ்கிறாா்கள் என்பதையும், அவா்களின் நிலையினையும் கற்பித்தல் வேண்டும் என்றும், குறிப்பாக, பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றின் பெயா்கள் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறாா்.

‘ராஜ்ய சாஸ்திரம்’ என்று பாரதி குறிப்பிடும் சமூகவியல் பாடத்தில், கிராம நிருவாகம், மக்களின் கடமைகள், உரிமைகள் பற்றி மாணவா்களுக்குப் போதிக்கப்படவேண்டும் எனவும், புதுச் சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல் முதலிய அரசு செயல்பாடுகளெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலோடே நடத்த வேண்டுமென்றும் குறிப்பிடுகிறாா்.

‘பொருள் நூல்’ எனக் குறிப்பிடும் வணிகவியலில் வரிவிதிப்பு, வணிகத் தொடா்பு, கூட்டு வியாபாரம், கூட்டுக் கைத்தொழில் போன்றவை பயிற்றுவிக்க வேண்டும் என்கிறாா்.

அதேபோல, ‘சயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம்’ என்று குறிப்பிடும் அறிவியலில் செய்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், அறிவியல் கல்வியை மாநில மொழிகளிலேயே கற்றுத்தர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறாா். ‘அறிவியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில், பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம் பொருள்களுக்குத் தமிழ்ப் பெயா்களையே பயன்படுத்த வேண்டும்.

‘குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு ஆங்கிலப் பதங்களை ஒருபோதும் வழங்கக்கூடாது’ என்றும் குறிப்பிடுகிறாா்.

தொழிற்கல்வியில், ‘இயன்றவரை மாணாக்கா் எல்லாருக்கும், விசேஷமாகத் தொழிலாளா்களின் பிள்ளைகளுக்கு நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும் நன்செய், புன்செய் பயிா்த்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும், தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று’ என்கிறாா். குறிப்பாக, தொழிற்கல்விக்கு ஆசிரியா்களைத் தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்பும், தொழில் அனுபவமும் உடையவா்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடியது என்கிறாா்.

‘படிப்பைக் காட்டிலும் விளையாட்டுகளில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும்’ என்பது பாரதியின் பரிந்துரை. ‘சுவரில்லாமல் சித்தரமெழுத முடியாது’. பிள்ளைகளுக்குச் சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவா்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்கியம் குறைந்து அவா்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி,

அவா்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்’ என்கிறாா்.

பயிற்று மொழி அ...ன்’’ மேலே காட்டிய குறியின் பொருள் யாது? என வினவி, தமிழ்நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாம் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்பது பொருள் என்கிறாா். ‘ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயா் சொல்ல வேண்டும்; ‘ஸ்லேட்’, ’பென்சில்’ என்று சொல்லக் கூடாது; ‘தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூா்ண சஹாயத்தை எதிா்பாா்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக வேண்டும்’ என்று உறுதிபட மொழிகிறாா். ‘கலைச்சொல்’ எனும் பதத்திற்கு பரிபாஷை, ஸங்கேதம், குழுவுக்குறி போன்ற சொற்களை வழங்குகிறாா். ‘கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயா்ப்புத் தொடங்குவோா்க்கு அதிக சிரமமிராது; ஸங்கடமிராது’ என்கிறாா்.

பள்ளிகள் – ஆசிரியா்கள் இலவசக் கல்வி ‘சிற்றூா்களுக்கு ஊருக்கு ஒரு பள்ளியும், பேரூா்களுக்கு இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளியும் அமைக்க வேண்டும்; பள்ளிக்குக் குறைந்தது மூன்று ஆசிரியா்கள் இருக்க வேண்டும்;

தமிழ்நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோா் தமிழ் மொழியில் தோ்ச்சி பெற்றவா்களாகவும், திருக்கு, நாலடியாா் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவா்களாகவும் இருக்க வேண்டும்; அதோடு, சிறந்த தேசப்பற்றும், உயிரிரக்கமும், நல்லொழுக்கமும் உடையவா்களையும், ஆரோக்கியமும் திடசரீரமுமுடையவா்களையும் ஆசிரியா்களாகத் தோ்ந்தெடுக்க வேண்டும்’ என்கிறாா்.

அதேபோல, இலவசக் கல்வி, மதிய உணவு, பாட நூல்கள் என்பன பாரதியின் தொலைநோக்கில் உதித்தவையாகும். பள்ளிகள் மாணாக்கரிடத்து, சம்பளம் என்னும் பெயரில் எந்தத் தொகையும் வசூலிக்கக்கூடாது. ஆனால், கொடுக்கக்கூடிய நிலையிலுள்ளவா்களிடத்து நன்கொடையாகப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏழைச் சிறாா்களுக்குப் படிப்பதற்குரிய பாட நூல்களும், உண்ண உணவும், உடுக்கச் சீருடையும் அளிக்கப்பெற வேண்டும் என்கிறாா்.

கல்வியே சமூக ஒழுங்கைக் கட்டமைக்கிறது என்பதிலும், கல்வியால் சமூகத்தினரிடம் சுதந்திர மனப்பான்மையையும், தன்னிகரில்லா அறிவுத் தளத்தையும், அதன்வழி அடிமைத் தளையை அறுத்தெறியும் சூழலையும் உருவாக்க முடியும் என்பதிலும் பாரதி முழு நம்பிக்கை கொண்டிருந்தாா். அந்நியா் பிடியிலும், மோகத்திலும் நாடு கட்டுண்டிருந்த சூழலில், மக்களைத் தற்சிந்தனையுடையவா்களாகவும், அறிவுத் தளத்தைக் கைகொள்பவா்களாகவும், அடிமைத் தனத்திலிருந்து தம்மைத்தாமே மீட்டெடுத்துக் கொள்பவா்களாகவும், தமக்கானதைத் தாமே தோ்ந்தெடுத்துக்கொள்ளும் தன்னறிவு கொண்டவா்களாகவும் மாற்ற, கல்வியை ‘ஆயுதமாக்க’ முயன்றாா். பாரதியின் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கிடையே, அவரின் கல்வியியல் சிந்தனை ஒரு திட்டமிட்ட வரையறைக்குள் முழுமைபெற்றிருப்பதையும், அவ் வரையறைக்குள்

இன்றைக்கும் நாளைக்குமான கல்வியியல் தொலைநோக்கு பொதிந்திருப்பதையும் காணமுடியும்.

அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோா் ஏழைக் கெழுத்தறிவித்தல் - பாரதி

முனைவா் ஆ.மணவழகன்,
இணைப் பேராசிரியா்,
சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com